சேலம்: தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு; அரசு பள்ளி மாணவிகள் தேர்ச்சி

54பார்த்தது
சேலம்: தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு; அரசு பள்ளி மாணவிகள் தேர்ச்சி
பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வில் சேலம் மாவட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினர். 

இந்த தேர்வில் சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 166 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 166 மாணவிகளில் 41 பேர் வெற்றி பெற்றனர். 

இதை தொடர்ந்து 3-வது ஆண்டாக ஒரே பள்ளியில் இருந்து அதிக மாணவிகள் தேர்ச்சி என்ற மாநில அளவிலான சாதனையை இப்பள்ளி படைத்துள்ளது. தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. 

நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியை கலா, உதவி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியர்கள் லெனின், இந்திராகாந்தி, ஜானகி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இதில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகள், ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ. 1,500 கல்வி உதவித்தொகை 2 ஆண்டுகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி