சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆவணி பேரூர் கீழ் முகம் மல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 22), பொக்லைன் ஆபரேட்டர். இவரது உறவுக்கார பெண்ணை போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பரத் என்பவர் கிண்டல் செய்ததாக கூறி அதனை விஜய் தட்டி கேட்டார். இதனால் இவருக்கும், பரத் தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே விஜய் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பரத் மற்றும் அவரது உறவினர்கள் அவரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த விஜய் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து விஜய் எடப்பாடி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக, போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வல்லரசு என்ற முனியப்பன் (24), ராஜ்குமார் (24), பிரசாந்த் (27), செல்வம் (27), ஸ்ரீதர் (20), முருகன் (21), கவுதம் (25) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.