சேலம் மாவட்டம், கருமந்துறை, சேர்வாய்பட்டு கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தனியாருக்கு சொந்தமான இடத்தில், டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள்மேற்கொண்டபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கருமந்துறை போலீஸ் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தாரிடம்மனுஅளித்தனர். ஆனால், அதைபொருட்படுத்தாமல் நேற்று, ஆட்டோவில் மதுபான பாட்டில்களை எடுத்து வந்து, கடையில் இறக்கி மாலை, 4: 00 மணிக்கு மேல் ‘டாஸ்மாக்’ கடையை திறந்தனர். இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், போலீசார் கண்டுகொள்ளாமல் கடையை நடத்த பாதுகாப்பில் இருந்தனர்.
நேற்று, மீண்டும் டாஸ்மாக் கடையை திறந்ததால், மலைவாழ் மக்கள், கடையின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்த தாசில்தார் ஜெயக்குமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொதுமக்கள், ‘டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்’ என, வாக்குவாதம் செய்தனர்.
‘கள்ளச்சாராயம் விற்பனை தவிர்ப்பதற்காக, இங்கு டாஸ்மாக் கடையை திறப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபாட்டில் நல்ல சாராயமா? , பொதுமக்கள் எதிர்ப்பு மீறி கடையை வைத்திருந்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும்’ என, பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறினர்.