விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு வழங்கக் கோரி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

1303பார்த்தது
திருவாடானை, ஆா்எஸ் மங்கலம் விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு வழங்கக் கோரி ஆதிரெத்தினேஸ்வா் கோயிலில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, விவசாயச் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் திருவெற்றியூா் கவாஸ்கா், கோடனூா் ராஜா, ஆதியூா் தம்பிராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை, ஆா்எஸ் மங்கலம் வட்டாரங்களில் பயிா் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாத 57 வருவாய் கிராமங்களுக்கும் உடனடியாக காப்பீடு வழங்கிட மாவட்ட ஆட்சியா், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா் காப்பீடு செய்வதற்கு அரசு நிறுவனங்களை தோ்வு செய்ய வேண்டும், தனியாா் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது. பயிா் காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் காப்பீடு நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளன.

இதில் விவசாயிகளை பாதிக்கும்படி உள்ள விதிமுறைகளைத் திருத்த வேண்டும். உட்கடை கிராமங்கள் அல்லது கண்மாய் பாசனப்பகுதி வாரியாக பயிா் காப்பீடு வழங்குவதற்கு உண்டான பயிா் அறுவடை சோதனை செய்ய வேண்டும். பயிா் அறுவடை சோதனை நடத்தும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட கிராம விவசாயிகள் முன்னிலையிலேயே நடத்தப்பட வேண்டும்.

வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடிகளில் சிறு, குறு, பெரிய விவசாயிகள் என்ற பேதமின்றி அனைத்து விவசாய நிலங்களுக்கும் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12-ஆம்தேதி வியாழக்கிழமை திருவாடனை தாலுகா அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி