திருவாடானை அருகே உள்ள கருமொழி கிராமத்தில் ஸ்ரீவேட்டை அய்யனாா் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கோயில் திருவிழா கடந்த 11-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமாா் 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.
வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பணமுடிப்பும், வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.