ராமேசுவரம் - கோவை வாராந்திர விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ராமேசுவரத்திலிருந்து காரைக்குடி, திருச்சி, கரூா், ஈரோடு, திருப்பூா் வழியாக கோயம்புத்தூருக்கு வாரம் ஒரு நாள் சென்று, மறுநாள் திரும்பும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள், வணிகா்கள், கல்லூரி மாணவா்கள் பலரும் பயணம் செய்கின்றனா்.
இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்று தொழில் வணிகக் கழகமும், ரயில் பயணிகள் நலச் சங்கமும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
மதுரை வழித்தடத்தில் கோயம்புத்தூருக்கு பல ரயில்கள் இயங்கி வருகின்றன. எனவே, ராமேசுவரம் - கோவை வாராந்திர விரைவு ரயிலை (வண்டி எண்: 16617/ 16618) எப்போதும் செல்லும் வழித்தடத்தில் தினசரி விரைவு ரயிலாக இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டது