ராமநாதபுரம் நகராட்சியில் போதிய வடிகால் வசதியின்றி நகர், புறநகர் சாலை, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில், நேற்றும் (செப்.,30) இன்றும் (அக்.,1) காலை வேளையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
இதன் காரணமாக ராமநாதபுரம் நகர், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படமால் இருப்பதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் ஆட்சியர் அலுவலகம், ராமேஸ்வரம் சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்குகிறது. குறிப்பாக பேருந்து நிலைய வளாகத்தில் தேங்கியதால் பயணிகளும், அதே போல, அரசு மருத்துவமனையில் தேங்கிய நீரால் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.