ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர்.
இவர்கள் வாகனங்களை கோயில் மற்றும் நகராட்சி கார் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு அங்கிருந்து 200 மீ. , ல் உள்ள கோயில் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரைக்கு நடந்து செல்கின்றனர். இந்நிலையில் பார்க்கிங் கட்டணம் ரூ. 20, 30 வசூலித்து விட்டு எந்த வாகனங்களை வேண்டுமானாலும் நிறுத்த அனுமதிக்கின்றனர்.
இதற்கு போலீசாரும் ஆட்சேபம் தெரிவிப்பதில்லை. இதனால் தடையை மீறி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் அரசு டவுன் பஸ்கள் அக்னி தீர்த்த கடற்கரை சாலையில் வந்து செல்ல முடியாமலும், பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அக்னி தீர்த்த கடற்கரை சாலையில் நிறுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.