ராமநாதபுரம் சாலைத்தெரு, அரண்மனை பகுதியில்
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர். மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் நகர் பகுதியில் பிரதான சந்தையாக உள்ள அரண்மனை பகுதி துவங்கி வண்டிக்கார தெரு, சாலைத் தெரு, அரசு மருத்துவமனை ரோடு, மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோடு, தேவிபட்டினம் ரோடு கேணிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் ரோடு ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம், மதுரை ரோட்டில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நடை பாதையும் ஆக்கிரமிப்புகளால் மாயமாகியுள்ளது.
ரோட்டோரங்களில் சிலர் கூடாரங்கள் அமைத்தும், கடைகள் வைத்தும் உள்ளனர். ரோட்டின் இருபுறங்களிலும் கண்டபடி இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர்.
அரசியல் விழாக்கள் தனியார் விழாக்களுக்கு ரோட்டை ஆக்கிரமித்து பிளக்ஸ் பேனர்கள் வைப்பது கொடி கட்டுவது அதிகரித்துள்ளது. இதனால் அலுவலக நேரத்தில் நகரில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிறிய அளவில் விபத்துகளும் நடக்கிறது. பெயரளவில் அவ்வப்போது அகற்றிவிட்டு, அதன் பின் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், போலீசார் அலட்சியமாக உள்ளனர். ராமநாதபுரம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய கலெக்டர் உத்தரவிட வேண்டும்.