பாம்பன் கடலில் 1988ல் அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் ராமேஸ்வரம் தீவை இணைப்பதாகும்.
இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் செல்கின்றனர். 36 ஆண்டுகள் வயதான இப்பாலத்தின் நடுவில் உள்ள இரும்புப் பிளேட் சேதமடைந்தும், தடுப்புச் சுவர்கள் உப்புக்காற்றில் அரிக்கப்பட்டும் அடிக்கடி உடைந்தன. மேலும் ஏராளமான சுற்றுலா வாகனங்களை பாலத்தின் நடுவில் நிறுத்துவதால் நெரிசல் மற்றும் பாலம் பலமிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.
இதனால் பாலத்தில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்து அப்புறப்படுத்திய நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பாலத்தின் பாதுகாப்பைக் கருதி 2024ல் அப்போதைய போலீஸ் எஸ்.பி., தங்கத்துரை உத்தரவுப்படி பாலத்தில் 11 சி.சி.டிவி., கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர். காலப்போக்கில் இதனை பராமரிக்க போலீசார் முன்வராததால் அனைத்து சி.சி.டிவி., கேமராக்களும் உடைந்துள்ளன.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பாலத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பழுதான கேமராக்களைச் சரிசெய்து பாலம், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.