இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள செவல்பட்டியில் உள்ள சந்தன மாரியம்மன், கருப்பணசாமி கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் 40 ஜோடி மாட்டுவண்டிகளும், தட்டான் சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் 30 ஜோடி மாட்டுவண்டிகளும், தேன்சிட்டு பந்தயத்தில் 16 ஜோடி மாட்டுவண்டிகளும் என மொத்தம் 86 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. மாட்டுவண்டி பந்தயத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன.
மாட்டுவண்டிகள் போட்டிபோட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று முந்திச் சென்ற காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இதில் முதல் 4 இடங்களைப் பிடித்த மாடுகளுக்கும் ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி போட்டியைக் காண சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.