கோடை மழையில் பசுந்தாள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு யோசனை.!

74பார்த்தது
கோடை மழையில் பசுந்தாள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு யோசனை.!
நயினார்கோவில்: நயினார்கோவில் வட்டாரத்தில் பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம் என விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் பானுபிரகாஷ் யோசனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:
கோடை மழையை சேமிக்க வயல்களில் மேல் மண்ணை உழுது சிறு சிறு கட்டிக்களாக்க வேண்டும். இதனால் மழை நீர் வெளியில் வழிந்து விடாமல் நிறுத்தமுடியும். மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள் வெளியே கொண்டுவரப்பட்டு சூரிய ஒளியால் அளிக்கப்படும். களைகளின் வேர்கள் முளைப்பது தவிர்க்கப்படும்.

முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், திட்டத்தின் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஏக்கருக்கு ரூ. 500 பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. விதைப்பு செய்ய விதைக்கும் ஏக்கருக்கு ரூ. 700 பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.

பாசன வசதி உள்ள நிலங்களில் தக்கைப்பூண்டு சாகுபடி செய்யலாம். போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்கும் போது எக்டருக்கு 40 கிலோ வரை விதைப்பு செய்யலாம். தக்கை பூண்டு சாகுபடி செய்வதால் மண்ணில் தழைச்சத்து அதிகரிக்கும். தக்கை பூண்டு பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ. 1000 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தக்கைப்பூண்டு விதைகளை வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி