ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பரமக்குடி அருகே பிடாரிசேரி கிராமத்தில் தண்ணீர் பிரச்னை தீராத நிலையில் மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடைகோடியில் பரமக்குடி ஒன்றியம் பிடாரிசேரி கிராமம் உள்ளது. தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் இங்கிருந்து ஆரம்பமாகிறது. இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
600 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்கள் இக்கிராமத்திற்கு செல்லத் தவறுவதில்லை.
அப்போதெல்லாம் அடிப்படை பிரச்சனையான குடிநீருக்கு உடனடி தீர்வு காணப்படும் என வாய்ஜாலம் காட்டியதுதான் மிச்சம். தற்போதும் தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்ட சூழலில் காட்சி பொருளாகவே உள்ளது.
பிடாரிசேரி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள குடிநீர் குழாய்களில் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வருகிறது.
அப்போது தள்ளு வண்டிகளில் குடத்தை நிரப்பிய படி பெண்கள் குடிநீருக்காக வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை தொடர்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மூன்றுக்கும் மேற்பட்ட குடிநீர் வாகனங்கள் கிராமத்திற்கு வந்து செல்கின்றன. இதில் குடம் ரூ. 10க்கு தண்ணீர் தேவைக்கு வாங்குகின்றனர்.
புழக்கத்திற்கு அங்குள்ள ஊருணியை மட்டுமே நம்பி இருக்கும் நிலை இருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.