ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கண்ணிராஜபுரம் ரோஜ்மாநகர் கடற்கரை கிராமம் உள்ளது. மீனவர்கள் அதிகமாக வசிக்கும் இப்பகுதியில் பகுதியில் அவ்வப்போது வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதாகவும், இதனால் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, கிராமத்தை நெறுங்கி வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ரோஜ்மாநகர் கல்லறை தோட்டத்தின் நுழைவு வாயில் அரிப்பு ஏற்பட்டு, கடலில் விழும் நிலையில் இருந்தது. மேலும் கல்லறை தேட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புக்கூடு, மண்டை ஓடுகள் மண்ணுக்கு வெளியே திறந்த வெளியில் காணப்பட்டது.
பின்னர் அது சரி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கடல் அரிப்பின் அளவு அதிகரித்து, கல்லறைத் தோட்டத்தின் நுழைவு வாயில் சாய்ந்து விட்ட நிலையில், ஆங்காங்கே மீண்டும் மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள் வெளியே தெரிகிறது. இந்த கடல் அரிப்பின் வீரியத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் உள்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி வைக்க முடியாமல் மீனவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டால் வீடுகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மீனவ குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.