விராலிமலை ஒன்றியம் மண்டையூர் பவளம் நகரை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவரது மகன் சக்திவேல் (39). விவசாயி. இவரும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (65) என்பவரும் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை விஷயமாக பைக்கில் ஆவூருக்கு சென்றுவிட்டு மீண்டும் மண்டையூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
பைக்கை சக்திவேல் ஓட்டினார். அரசிக்காடு அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிராக்டர் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சக்திவேல், பாஸ்கர் ஆகியோரின் கால்கள் உடைந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மண்டையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை ஓட்டி சென்றவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.