திருமயம்: அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள் உள்ளன. இது பேரூராட்சியாகவும் உள்ளது. இங்கு பல்வேறு துறை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கோயில்கள் உள்ளன. அரிமளம் ஒன்றியத்தை சேர்ந்த ஏம்பலில் பிரசித்தி பெற்ற முத்தையா சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வழிபாட்டுக்காக வந்து செல்கின்றனர்.
அரிமளத்தில் இருந்து ஏம்பலுக்கு நேரடியாக டவுன் பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் கே. புதுப்பட்டி வந்து அங்கிருந்து பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது. இதற்கு கூடுதல் செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரிமளத்தில் இருந்து ஏம்பலுக்கு காலை, மதியம், மாலை, இரவு என்று 4 வேளைகளில் டவுன் பஸ் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் அரிமளம், கே. புதுப்பட்டி, வாளரமாணிக்கம், குறுங்களூர், இரும்பாநாடு, திருவாக்குடி, மதகம், ஏம்பல் பகுதிகளை சேர்ந்த அலுவலர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பக்தர்கள் என்று அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.