புதுக்கோட்டை: பயிலும் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி முதல் தொடங்கியுள்ள நிலையில், இப்பணியில் 2. 45 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ. சா. மெர்சி ரம்யா அறிவித்துள்ளார்.
கோடைவிடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை தொடங்கின. பள்ளி தொடக்கத்தின்போதே, பயிலும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் நடத்தும் பணியும்தொடங்கியது. புதுக்கோட்டை நகரிலுள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்தப் பதிவு முகாமைத் தொடங்கி வைத்த ஆட்சியர் ஐ. சா. மெர்சி ரம்யா கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் 19 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையும், எல்காட் நிறுவனமும் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்தச் சேவை வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளில் 6 முதல் 7 வயது வரையுள்ள மாணவர்கள், 16 முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இச்சேவை இலவசமாகவும், பிற மாணவர்களுக்கு ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணமும் வசூலிக்கப்படும். புதுப்பித்தல் பணியும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மெர்சி ரம்யா.