புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் சிலர் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், சிலர் சாதி பிரச்சினையை தூண்டிவிடுவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழையூர் பகுதியில் பேனர் வைக்கப்பட்டது.
இதையடுத்து மழையூர் பள்ளியில் கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் 2 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு ஒரு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காலாண்டு தேர்வை புறக்கணித்த மாணவர்கள் சிலர் புதுக்கோட்டைக்கு சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் 2 ஆசிரியர்கள் இட மாறுதலை திரும்ப பெற வேண்டும் எனவும், வேறு சில ஆசிரியர்களை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில் இப்பள்ளியில் பிளஸ்2 படிக்கும் கருப்பட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (17) என்ற மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறிது நேரத்தில் எறும்பு மருந்தை தின்றுவிட்டு மயங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவனை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.