கேரள மாநில கண்ணூர் மாவட்டத்தையொட்டியுள்ளது புதுச்சேரியின் மாகே பிராந்தியம். இங்கு இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாகேவின் மையழி ஆற்றின் வழியே கடலுக்கு கடும் வெள்ளம் நீர் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் ஆற்றிலும், கடலிலும் மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தாழ்வான பகுதியான செம்பரா, பந்தக்கல், பள்ளூர் மற்றும் சாளரக்கரா விளைநிலங்கள் ஆகியவை வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன. இந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளிவர முடியாமல் சிக்கி கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மண்டல நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.