புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது. ஆகஸ்ட் 14-ந் தேதி கூட்டத்தொடர் முடிந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை விதிப்படி 6 மாதத்துக்கு ஒருமுறை சபை கூட்டப்பட வேண்டும். அதன்படி வருகிற 14-ந் தேதிக்குள் சபை கூட்டப்பட வேண்டும். இதன்படி புதுச்சேரி சட்டசபை நாளை (புதன்கிழமை) காலை 9. 30 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சபையில் ஒப்புதல் பெறப்படுகிறது.
நாளை கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் காகிதம் இல்லா கூட்டத்தொடராக உள்ளது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிய அளவிலான தொடுதிரை கணினி பொருத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து சபாநாயகர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெறும் அரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.