16-வது முறையாக மாநில அந்தஸ்து தொடர்பாக புதுவை அரசு தீர்மானம்

58பார்த்தது
புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. 12-ஆம் தேதி பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று இறுதி நாளான தனிநபர் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஏற்கனவே 15 முறை ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ள நிலையில் மீண்டும் இன்று காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

இதன் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர்(திமுக) சிவா, இப்போதைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்றும், மாநில அந்தஸ்து பெற ஆட்சியை கலைத்து விட்டு வாருங்கள். போராடுவோம் என முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து தனி நபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்தார். இதையடுத்து சபாநாயகர் செல்வம், மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி