புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் மூன்று மாதத்திற்கு தற்காலிகமாக கடலூர் சாலை ஏ. எப். டி மைதானத்தில் பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. ஆனால் இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் அவசரகதியில் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தை சுற்றி தாவீது பேட்டை, ரோடியார்பேட்டை, மற்றும் வானர பேட்டை ஆகிய பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இந்த நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்லும்பொழுது புழுதிகள் பறப்பதால் அப்பகுதி மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகின்றனர்.
மேலும் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் கழிவறைகள் சரியாக அமைக்கப்படாததால் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் கழிவுநீர்கள் குட்டை போல் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்தும் உடனடியாக தற்காலிக பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு ஒரு பேருந்து கூட வெளியில் செல்லாத அளவிற்கு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேருந்துகள் எங்கும் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.