டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பையொட்டி தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றாக புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரி திரும்பும் சாகர் சங்க்ரம் பாய்மரப் படகு கடல் சாகச பயணத் தொடக்க விழா புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடைபெற்றது.
கடலூர் தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு மற்றும் புதுச்சேரி தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு இணைந்து நடத்தும் இந்த பாய்மரப் படகு கடல் சாகச பயணத்தினை புதுச்சேரி ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். எம்எல்ஏ பாஸ்கர்(எ)தட்சிணாமூர்த்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், தேசிய மாணவர் படை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து தேசிய மாணவர் படை கப்பற்படை பிரிவைச் சேர்ந்த 25 மாணவியர் உட்பட 60 மாணவ மாணவியர் இந்த கடல் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவினருடன் இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும், 2 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர். இப்பயணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணிக்கின்றனர்.
இந்த கடல் சாகச பயண குழுவினர் 302 கி. மீ. தூரத்தை பத்து நாட்களுக்கு கடக்க உள்ளனர். வரும் 20-ம் தேதி மீண்டும் புதுச்சேரிக்கு திரும்புகின்றனர்.