பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழாவுக்கான முகூர்த்தக்கால நிகழ்ச்சி கோவிலில் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி கோவிலில் யாகசாலை மற்றும் பந்தலுக்கான முகூர்த்தக்காலை பெருமாள் முன்பு உள்ள மண்டபத்தில் வைத்து பட்டாச்சாரியார்கள் பூஜை செய்தனர். பின்னர் யாகசாலை மற்றும் பந்தலுக்கான முகூர்த்தக்கால் மங்கள இசை முழங்க நடப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் நிர்வாகத்தினர், காரியக்காரர்கள், உபயதாரர்கள், விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி காலையில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது