நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே செம்பக்கொல்லி, பாதிரிமூலா, அத்திசால், கோட்டப்பாடி, மழவன் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
நேற்று இரவு, கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண். 3, செம்பக்கொல்லியில் காட்டு யானை புகுந்தது. தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளில் முகாமிட்டது. அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. பின்னர் அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளிக்கு சென்ற வாகனங்களை காட்டு யானை துரத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை விரட்டினர். எனினும், நேற்றும் அதே பகுதியில் உள்ள டேன்டீ தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானை மீண்டும் நுழைந்தது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.