உதகையில் கடந்த ஐந்து நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பைக்காரா படகு இல்லம், கனமழை காரணமாக சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி ஐந்து நாட்களாக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் நேற்று முதல் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வெண்மேக மூட்டத்திற்கு இடையே குளுகுளு காலநிலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.
இதனால் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மன்சரிவுகள் ஏற்பட்டு மரங்கள் விழுந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று முதல் மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில் உதகை கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான பைக்காரா படகு இல்லம் கடந்த ஐந்து நாட்களுக்கு பின் நேற்று மதியம் திறக்கப்பட்டது.