முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவனல்லா பகுதியில் உலா வரும் புலி கடந்த சில நாட்களில் இரண்டு மாடுகளை தாக்கி கொன்றது. பகல் நேரத்தில் உலா வந்த அந்த புலியை, சிறுவன் உள்ளிட்ட சிலர் பார்த்துள்ளனர். அச்சமடைந்த மக்கள், புலியைப் பிடிக்க வலியுறுத்தி உள்ளனர்.
தொடர்ந்து, வனச்சரகர் தனபால் தலைமையில், 20 வன ஊழியர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க, 24 தானியங்கி கேமராக்கள் வைத்துள்ளனர். மேல்கம்மநல்லி கிராம மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் தங்கள் வாகனங்களில், பள்ளிக்கு அழைத்து சென்று வருகின்றனர்.
புலி நடமாட்டம் குறித்து, வனத்துறை சார்பில், நேற்று காலை முதல் ஒலிபெருக்கியில், பொது மக்களுக்கு அறிவிப்பு செய்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள முட்புதர்களை வன ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
புலி நடமாட்டம் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முட்புதர்கள் அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தானியங்கி கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகவில்லை. பொதுமக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்த பட்டு வருகின்றனர்.