தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊட்டியில் மாரத்தான் போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம் (மாரத்தான்) போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகளில், வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
நேற்று காலை இப்போட்டிகள் ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மைதானத்தில் துவங்கியது. போட்டிகளை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் துவக்கி வைத்தார். இளைஞர்கள் மற்றும் பெண்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் துவங்கிய இந்த ஓட்டப்பந்தயம் கலெக்டர் அலுவலகம், ஹில் பங்க், தமிழக மாளிகை வழியாக பிங்கர் போஸ்ட் பகுதியை அடைந்து அங்கிருந்து மீண்டும் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மைதானத்தை வந்தடைந்தது.
மாணவர்களுக்கு 8 முதல் 10 கி. மீ தூரமும், மாணவிகளுக்கு 5 கி. மீ தூரமும் இந்த ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.