நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மரப்பாலம் பகுதியில் நரேந்தர் (42) என்ற தொழிலாளி கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது உறவினர் வீரேந்தரை ஒடிசாவில் போலீசார் நேற்று (மார்ச் 20) கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நரேந்தர் மற்றும் வீரேந்தர் ஆகியோர் குன்னூர் அருகே உள்ள சுலைமான் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இருவரும் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்தனர். கடந்த 16ஆம் தேதி இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த வீரேந்தர், நரேந்தரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை நடந்த அன்று இரவு முதல் வீரேந்தரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் ஒடிசாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து, குன்னூர் போலீசார் ஒடிசாவுக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த வீரேந்தரை கைது செய்தனர். அவர் விரைவில் குன்னூர் அழைத்து வரப்படுவார் என தெரிகிறது.