முறைகேடுகளும், குளறுபடிகளும் நிறைந்த நீட் தேர்வு முறையினையே நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்தியா முழுமைக்கும் நடப்பாண்டிற்கான நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடிகள் நடைபெற்ற நிலையில், நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததுடன், அதற்காக வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக அவசர அவசரமாக வெளியிட்டதும், தேர்வில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்களின் வரிசை எண்கள் அடுத்தடுத்து உள்ளதும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்த ஐயத்தை அதிகரிக்கவே செய்கிறது. தொடர்ச்சியாக நடைபெறும் இம்முறைகேடுகள் அனைத்தும் நீட் தேர்வு முறையே தேவையற்ற ஒன்று என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.