நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பகுதியில் நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலக கட்டடத்தை புதுப்பித்து புதிய நூலகத்தை திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினர் ஈ. ஆர். ஈஸ்வரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு, மல்லசமுத்திரம் பேரூராட்சித் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி. எஸ். மாதேஸ்வரன், நகர அமைப்பு திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தனர். திருக்குறளை பாடி விழா தொடங்கப்பட்டது.
நூலக கட்டட வளாகத்தில் உள்ள திருவள்ளுவர், காந்தி சிலைகளை சட்டப் பேரவை உறுப்பினர் ஈ. ஆர். ஈஸ்வரன் திறந்து வைத்து பேசுகையில், திருவள்ளுவருக்கும், காந்திக்கும் ஒரே இடத்தில் இங்குதான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் காந்தி பேசும்போது அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறியதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரமுகர்களுக்கு திருவள்ளுவர் சிலை பரிசாக வழங்கப்பட்டது.