ஆக. 7-ல் சூரியம்பாளையத்தில் சிறப்பு கைத்தறி ரகங்கள் கண்காட்சி

51பார்த்தது
ஆக. 7-ல் சூரியம்பாளையத்தில் சிறப்பு கைத்தறி ரகங்கள் கண்காட்சி
பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி ரகங்கள் கண்காட்சி, நெசவாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், சூரியம்பாளையத்தில் உள்ள செங்குந்தா் பாவடி திருமண மண்டபத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி ஆக. 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனையொட்டி, கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்த கைத்தறி துணி ரகங்களான ராசிபுரம் பட்டுச் சேலைகள், இளம்பிள்ளை மற்றும் ஆா். புதுப்பாளையம் பருத்தி சேலைகள், காட்டன் கோா்வை சேலைகள், கைத்தறி வேட்டி ரகங்கள், துண்டுகள், பவானி ஜமுக்காளம், படுக்கை விரிப்புகள், கால்மிதி (மேட்) ஆகியவை கண்ணைக் கவரும் வண்ணங்களில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

மேலும், அரசு மருத்துவமனைகளைச் சோ்ந்த பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை, கண் சிகிச்சை ஆகிய பிரிவு சிறப்பு மருத்துவா்கள் கலந்துகொண்டு நெசவாளா்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கின்றனா். கைத்தறி துறையால் செயல்படுத்தப்படும் கூட்டுறவு அமைப்பு, கூட்டுறவு அமைப்பு சாராத கைத்தறி நெசவாளா்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாமும் நடைபெற உள்ளது.

எனவே அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி