பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமையன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். இந்த சந்தைக்கு பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் இருந்தும் தென்னை விவசாயிகள் ஏராளமானவர்கள் தேங்காய் பருப்புகளை ஏலத்திற்கு கொண்டு வருவார்கள். இதனை ஏலம் எடுப்பதற்காக பரமத்திவேலூர், ஈரோடு, வெள்ளக்கோவில், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பலர் வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற மே மாதம் 1-ஆம் தேதி விடுமுறை என்பதால் ஏலம் நடைபெறவில்லை.
இந்தநிலையில் நேற்று சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு மொத்தம் 11 ஆயிரத்து 40 கிலோ தேங்காய் பருப்புகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 176.78-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 146.99-க்கும், சராசரியாக ரூ. 175.89-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 135.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 110.10-க்கும், சராசரியாக ரூ. 128.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 16 லட்சத்து 800-க்கு ஏலம் போனது.