சென்னை மேற்கு வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி உமா (58). இவர் கடந்த மாதம் 8-ந் தேதி ப. வேலூரில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்காக கரூரில் இருந்து பஸ்சில் வேலூர் வந்தார். வேலூர் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து கீழே இறங்கி உள்ளார். அப்போது பஸ்சில் அவருடன் நோட்டமிட்டு வந்த 3 பெண்களில் ஒருவர் சில்லரை காசுகளை கீழே கொட்டிவிட்டு அதை எடுத்துக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் மற்ற 2 பெண்கள் உமாவின் கவனத்தை திசை திருப்பிவிட்டு அவர் பேக்கில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகளை திருடி கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து உமா வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தங்க நகைகளை திருடிய பெண்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் வேலூர் பஸ் நிலையம் பின்புறம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பெண்கள் போலீசாரை கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அவர்களை துரத்தி பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் சக்தி என்பவரின் 2 மனைவிகளான அமுதா (36), நந்தினி (30) மற்றும் தேவா என்பவரின் மனைவி பூமிகா என்கிற பரிமளா (25) என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.