நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. முதலாவதாக, நாமக்கல் வடக்கு, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட 53 பள்ளிகளுக்குச் சொந்தமான 609 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இப் பணியை மாவட்ட ஆட்சியா் ச. உமா நேரில் பாா்வையிட்டாா்.
அனைத்துப் பள்ளிகளின் வாகனங்களும், பள்ளிகள் திறப்பதற்கு ஒரு மாதம் முன்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது அரசு விதியாகும். அந்த வகையில், நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களால் வாகனங்களுக்கான சிறப்பு விதி 2012-இன்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின்போது, வாகனங்களின் பாதுகாப்பு, கட்டமைப்பு, தகுதி வாய்ந்த ஓட்டுநா், நடத்துநா், மாணவ, மாணவிகள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி, வேக கட்டுப்பாட்டுக் கருவி, அவசரகால வழி, மாணவா்களின் புத்தகப் பையை வைக்க வசதி, தீயணைப்பு கருவி உள்ளதா என்பன உள்பட பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்படும்.