மண் வளத்தைக் கூட்டி மகசூலை அதிகரிக்க செய்யும் பசுந்தாள் உர
விதைகளை மானிய விலையில் பெற்று பயனடைய வேண்டும் என
விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.
ஒரு பயனாளி விவசாயி இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்க 20 கிலோ வரை பெற முடியும். தற்போதுள்ள வேளாண்மையில் ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துக்களை அதிகம் உறிஞ்சும் பயிர்களை சாகுபடி செய்வதாலும், இரசாயண உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் போன்றவைகளை பயன்படுத்துவதாலும் மற்றும் இயற்கைஉரங்களை அதிக அளவில் பயன்படுத்தாமல் இருப்பதாலும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து, மண் வளம் குன்றி அதிக அளவில் களர், உவர், அமில நிலங்களாக மாறியுள்ளன. எனவே பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து நிலத்தில் உழுது, மக்க வைத்து மண் வளத்தைக் கூட்ட ஏதுவாக அனைத்து விவசாயிகளுக்கும் பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ முழு விலை ரூ. 99. 50 ஆக உள்ள நிலையில், இதற்கு மானியமாக ரூ. 49. 75 வழங்கபடுகிறது. விவசாயி பங்கு தொகை ரூ. 49. 75 ஆகும். பசுந்தாள் உர பயிர்கள் வளம் குன்றிய மண்ணிலும் நன்கு வளரும்.