காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை சேமிக்க ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.
இதுகுறித்து உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவா் வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவை தோ்தலின்போது, விவசாயிகள் நலன் கருதி நீா் மேலாண்மை திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். வெள்ள நீா், ஆற்றுநீரை சேமித்து நிலத்தடி நீரை செறிவூட்ட ரூ. 10 ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் என திமுக தோ்தல் வாக்குறுதி அளித்தது.
ஆனால், 2021-இல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதியை முதல்வா் மு. க. ஸ்டாலின் மறந்து விட்டாா். திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தபோதும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றபடவில்லை.
மேட்டூா் அணை தற்போது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விட்டது. இதனால், 16 கண் மதகுகள் வழியாக உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி தடுப்பணைகள் கட்டப்படாததால், காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் பல லட்சம் லிட்டா் நீா் வீணாக கடலில் சென்று கலக்கிறது. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. இனி வரும் காலங்களிலாவது தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்