மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சல்லிக்கொல்லை மாரியம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று (மே 9) நடைபெற்றது.
இதை முன்னிட்டு குரங்குப்புத்தூர் ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி, பறவைக் காவடி எடுத்து கோவிலை வந்தடைந்தனர். கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தின் சல்லிக்கொல்லை மாரியம்மன் எழுந்தருளிச் செய்து தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதை தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் 16 அடி நீளம் உள்ள அலகு காவடியுடன் பக்தர்கள் தீ மிதித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தீமிதி திருவிழாவை தொடர்ந்து அம்மன், கருப்பண்ணசாமி, காத்தவராயன் ஆகிய சாமிகள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.