சீா்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் மீன்பிடி வலைகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்டதைக் கண்டித்து, மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடுவாய் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர். இவர் தனக்குச் சொந்தமான ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை வீட்டு வாசலில் வைத்திருந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு மனோகர மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள், மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மனோகரின் தாயார், கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால், வலை அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் தப்பியது.
எனினும், மீன்பிடி வலைகள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து, சீர்காழி காவல் நிலையத்தில் மனோகர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், வலைக்கு தீ வைத்தவர்களை விரைவில் கண்டறிந்து, கைது செய்ய வலியுறுத்தி, தொடுவாய் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.