நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள நவநீதேஸ்வர சுவாமி கோயில் சித்திரை திருவிழா திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் சந்திரபிரையில் வீதியுலா, சிம்ம வாகனத்தில் வீதியுலா, பூத வாகனத்தில் வீதியுலா, வெள்ளி ரதத்தில் வீதியுலா என நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர் சிவகாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கந்தா முருகா அரோகரா என பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.
சிவ வாத்தியங்கள் மற்றும் தாரை தப்பட்டைகள் முழங்க கலை பண்பாட்டு துறை சார்பாக இளைஞர்கள் பாரம்பரியமான சிலம்பாட்டம் ஆடி வந்து அங்குள்ளோரை வெகுவாக கவர்ந்தது. தேர் செல்லும் சாலைகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர், நாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.