திருமருகல் அருகே
முத்து மாரியம்மன் கோவில் பாலாலயம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன், மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகமும், கிராமவாசிகளும் முடிவு செய்தனர். முதல்கட்டமாக மூலவர் கோபுரங்களை திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் பாலாலய பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. இதையடுத்து கோபுரங்கள், மண்டபங்கள், தரைதளம் உள்ளிட்ட கோவிலின் பல்வேறு இடங்களில் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது. சாமிகளுக்கு பாலாலயம் செய்யப்படாததால் முத்துமாரியம்மன், மகாகாளியம்மன் உள்ளிட்ட அனைத்து சாமிகளையும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.