நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழும நிறுவனர் செவாலியே டாக்டர் ஜி.எஸ். பிள்ளையின் 95-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தில் நடைபெற்ற விழாவை ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி, இணைச் செயலர் சங்கர் கணேஷ், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாசம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், வி.பி.என்கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றுக்கொண்டனர். சிகிச்சைப் பெற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. முகாமில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானமும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.