திருக்கண்ணபுரம்
சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகப்பட்டினம், ஜூன். 4-
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
*வைகாசி பிரமோற்சவம்* திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, வருகிற 6-ம் தேதி தங்க கருடசேவையும், 10-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 11-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் மணிகண்டன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.