மயிலாடுதுறையில் 2003-ஆம் ஆண்டு தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த ஏழுமலை என்பவரிடம் ராமமூா்த்தி என்ற சாமிப்பிள்ளை என்பவா் கடனுக்கு மாம்பழம் கேட்டுள்ளாா். ஏழுமலை பழம் கொடுக்க மறுத்ததால், அவரை கத்தியால் கழுத்தில் குத்திக் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். ஏழுமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ராமமூா்த்தியை மறுநாள் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் சிவதாஸ் ஆஜரானாா்.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், ராமமூா்த்திக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கவிதா உத்தரவிட்டாா். இதையடுத்து ராமமூா்த்தி (52) சிறையில் அடைக்கப்பட்டாா்.