மயிலாடுதுறை: பட்டணப்பிரவேச பல்லக்கு உற்சவம்

51பார்த்தது
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பிரசித்தி பெற்ற பட்டணப்பிரவேச பல்லக்கு உற்சவம் நடைபெறும் வைகாசி பெருவிழா மற்றும் குருமுதல்வர் குருபூஜை பெருவிழா ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 

தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் மே 15-ஆம் தேதியும், திருத்தேர் உத்சவம் மே 17 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மே 19-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டணப்பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். 

இப்பெருவிழாவின் கொடியேற்றம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் இன்று (மே 9) நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனகர்த்தர் முன்னிலையில் திருவிழாவின் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தொடர்புடைய செய்தி