மயிலாடுதுறை: மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

76பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் அருகேயுள்ள திருப்புங்கூர் பிரதான சாலையைச் சேர்ந்த பரமநாதன் மகள் தேவிக்கும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பரந்தாமன் மகன் சரவணனுக்கும் (40) கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

பின்னர் குடும்பத்தகராறு காரணமாக தேவி, அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். சரவணன் அடிக்கடி தேவியை சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், 2017 மார்ச் 29-ஆம் தேதி தேவி, அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, அவரது தந்தை வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தேவியை சரவணன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சரவணனை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி, சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி