கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து அங்கிருந்து டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு ஆற்று நீர் வரத் தொடங்கியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதிகளுக்கு ஆற்று நீர் வந்தது. என்றாலும் குருவை சாகுபடி செய்த வயலுக்கு ஆற்று நீர் வரவில்லை என விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பொதுப்பணித்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பல பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீரை திறந்துவிட்டனர். இதையடுத்து அரிச்சந்திராநதியிலிருந்து பிரிந்து செல்லும் பல கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்வதால் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் தேவையான நீர் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் திறப்பதை நிறுத்தாமலும் , முறை வைத்து திறக்காமலும் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.