காரைக்காலில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நாகை வழியாக கடத்தப்படுவதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் வேம்பரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி மினிலோரி ஆட்டோ வேகமாக வந்தது. அந்த வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெங்காயத்திற்கு அடியில் சாக்கு மூட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து கொண்டு சென்றது தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோவை வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்று சோதனை செய்தனர். சோதனையில் 32 மூட்டைகளில் தலா 30 கிலோ வீதம் 960 கிலோ ஹான்ஸ், 200 கிலோ கூலீப், 100 கிலோ விமல் பாக்கு என மொத்தம் 92 மூட்டைகளில் மொத்தம் ஆயிரத்து 280 கிலோ எடை கொண்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். மினி லோரி ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் முப்பயத்தங்குடியை சேர்ந்த அந்தோணிராஜ் (36), விழிதியூரைச் சேர்ந்த ராஜ்குமார் (50), நிரவியை சேர்ந்த ஹரிஹரன் (25) என்பதும் தெரியவந்தது.