மதுரை மாவட்டம் பாலமேடு, தேவ குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்குவாசல் செல்லாய் அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.
கடந்த மே மாதம் 31ஆம் தேதி செல்லாய் அம்மனுக்கு சாமி சாட்டுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மூன்று நாட்கள் நடந்த இந்த உற்சவ விழாவில் மங்கள இசை முழங்க வலம்புரி விநாயகர் கோவிலில் உலக மக்கள் உண்மைக்காக வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பொங்கல் மண் பானை தலையில் சுமந்து ஊர்வலமாக அம்மன் ஆலயத்திற்கு சென்றனர். பின்னர் சிறப்பு வானவேடிக்கை முழங்க திருக்கண் திறந்து அலங்கார அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரண்டாம் நாள் திருவிழாவில் மஞ்சக்கருப்பு சுவாமிக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பின்னர் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூன்றாம் நாள் திருவிழாவாக வானவேடிக்கை முழங்க சிறப்பு அலங்காரத்துடன் பொதுமக்கள் அனைவரும் பழத்தட்டு ஊர்வலமாக எடுத்து வந்து செல்லாய் அம்மன் ஆலயத்திற்கு சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. குழந்தை வரம் வேண்டுவோர்க்கு அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.