மதுரை சிக்கந்தர்சாவடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த லதா புஷ்பராஜ் (50) என்பவர் சிலைமான் அருகே உள்ள புளியங்குளம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று (ஜூன் 5) மாலை பள்ளி முடிந்து இவரும், மேலும் 3 ஆசிரியைகளும் ஷேர் ஆட்டோவில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தனர். ந்நிலையில் புளியங்குளம் தனியார் நூற்பாலை அருகே ஆட்டோ வந்தபோது, முன்னால் சென்ற காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன.
இந்த வாகனங்கள் மீது மோதாமலிருக்க ஷேர் ஆட்டோவை அதன் ஓட்டுநர் திருப்பினார். அப்போது, நிலை தடுமாறிய ஆட்டோ சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆசிரியை லதா புஷ்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த மூன்று ஆசிரியைகள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆட்டோ ஓட்டுநர், மேலும் ஒரு பயணி லேசான காயமடைந்தனர். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.